தலை வெட்டி பூ – நாம் விளையாடிய களை, நாம் கவனிக்கத் தவறிய மூலிகை

நிரஞ்சனா மற்றும் தேவேஷின் சென்னை விஜயத்தின்போது, ஒரு சிறிய காட்டுப் பூ என்னுடைய குழந்தைப்பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.

நாங்கள் நிதானமாக நடந்து கொண்டிருந்தபோது, நான் அதைக் கண்டேன் – குழந்தைகளாக இருக்கும் போது நாங்கள் விளையாடிய அதே பூ. நான் புன்னகைத்து, நாங்கள் இந்த பூவை எங்களின் தாத்தா  போல கற்பனை செய்து, “தாத்தா தாத்தா காசு குடு! இல்லைன்னா உன் தலையை வெட்டிடுவேன்!” என்று சொல்லி பிறகு, மெதுவாக ஒரு அசைவில், அந்த பஞ்சுபோன்ற பூவின் உச்சியைக் காற்றில் பறக்கவிடுவோம், என்று என் குழந்தைப்பருவ நினைவுகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

 நாங்கள் அதை தாத்தா தலை வெட்டி பூ என்று அழைத்தோம்.

தேவேஷ் அதைக் கேட்டு மிகவும் ரசித்து,  தனது அழகான இந்தி உச்சரிப்பில் “தாத்தா, தாத்தா, காசு குடு!” என்று திரும்பத் திரும்பச் சொல்ல, அதைக் கண்டு நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற ஒரு விவசாயி சற்று நின்று, எங்களை ஒரு கணம் பார்த்துவிட்டு, புன்னகையுடன்,

“அம்மா, அந்தப் பூ விளையாடுவதற்கு மட்டுமல்ல. அது ஒரு மிகச் சிறந்த மூலிகையும் கூட,” என்றார்.

அவர் சொன்ன அந்த வார்த்தை, இந்தக் கதைக்கு ஒரு புதிய பக்கத்தைத் திறந்தது – நாங்கள் விளையாட்டுக்காக உபயோகித்த இந்த பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா என்று நான் ஆச்சரியப்பட்டேன். 

தலை வெட்டி பூ என்றால் என்ன?

டிரைடாக்ஸ் புரோகம்பன்ஸ் (Tridax procumbens) என்று அறிவியல் ரீதியாக அறியப்படும் இந்தக் காட்டுப் பூ, பொதுவாக சாலையோரக் களைச்செடியாகவே புறக்கணிக்கப்படுகிறது. வேலிகள் ஓரம், மரங்களுக்கு அடியில், வயல்வெளிகளுக்கு அருகில் இதைப் பார்க்கலாம். இது சிறியது—வெள்ளை இதழ்களுடன் மஞ்சள் நிற மையம் கொண்டது. மற்றும் நீண்ட, ரோமங்கள் நிறைந்த தண்டுகளில் வளரும். பூ பூத்த பிறகு, பூவின் தலை மினி டேன்டேலியன் போல, பறக்கத் தயாராக இருக்கும் பஞ்சுபோன்ற விதைக் கூட்டமாக மாறும். (படத்தில் இரண்டையும் பார்க்கலாம்) 

இதை வேறு பெயர்களிலும் நீங்கள் கேட்டிருக்கலாம்.  ஆங்கிலத்தில் கோட் பட்டன்ஸ் (Coat Buttons), தமிழில் தவசி கீரை, புல்லாரி, அல்லது வெட்டுக்காய பூ, இந்தியில் கம்ரா (Ghamra) அல்லது கம்பர்மொடி (Kambarmodi) என்று அழைக்கப்படுகிறது.

கவனிக்கப்படாத மருத்துவ சக்தி:

வேடிக்கையான தோற்றத்திற்குப் பின்னால், இந்தக் காட்டுப் பூ ஆச்சரியமான குணப்படுத்தும் ஆற்றலை மறைத்துள்ளது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் டிரைடாக்ஸ் (Tridax)  பெரிதும் மதிக்கப் படுகிறது.  பாரம்பரிய மருத்துவத்தில் இது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் காட்டுப் பூ நவீன ஆராய்ச்சியாளர்களாலும் ஆதரிக்கப்படுகிறது.

டிரைடாக்ஸின் பாரம்பரிய மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான பயன்கள்:

 1. காயங்களை குணப்படுத்துதல்: இதன் இலைகளை நசுக்கி அந்த சாறை   சிறிய வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த தாவரம் விரைவாகக் காயங்களை குணப்படுத்த உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

 2. இரத்தப்போக்கு கட்டுப்படுத்துதல்: பல கிராமங்களில் இரத்தப்போக்கு உள்ள காயங்களுக்கு இது ஒரு முக்கிய மருந்தாக உள்ளது. இதன் இலைகளை நசுக்கி அதன் சாற்றை தடவ, இரத்தப் பெருக்கு  விரைவாக கட்டுப்படுகிறது. 

நான் இதை எங்கள்  நண்பரின் பண்ணை வீட்டிற்கு சென்ற போது நேரில் கண்டேன்.  எங்களுக்காக வேலையாள் ஒருவர் இளநீர் வெட்டும்போது, அறியாமல் அவர் கையில் அரிவாள் பட்டு கீறல் விழுந்தது. அவர் ஒரு கணம் கூட பதட்டப்படாமல்,  அருகிலிருந்த சில டிரைடாக்ஸ் இலைகளைப் பறித்து, நசுக்கி, காயத்தின் மீது அழுத்தி, அமைதியாக மீண்டும்  இளநீர் வெட்டுவதைத் தொடர்ந்தார். அவரின் இந்த  செயல் மிகவும் இயல்பாக இருந்தது.  

 3. அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணம்: வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சிறிய வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறனுக்காக அறியப்படும் டிரைடாக்ஸ், சுளுக்கு, பூச்சிக் கடி மற்றும் அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கவும்  பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

 4. புண்களுக்கு  (ulcer) நிவாரணம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள்: இந்தத் தாவரம் பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டிற்காகவும் சில சமயங்களில் அல்சர் மற்றும் சிறிய தொற்றுகளுக்கான மருந்துகளிலும்  பயன்படுத்தப்படுகிறது.

 5. முடி வளர்ச்சி: டிரைடாக்ஸ் இலைச் சாறு பாரம்பரியமாக மூலிகை முடி எண்ணெய்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அடர்த்தியை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

நாங்கள் விளையாட்டாக “தலையை வெட்டிய” அதே தலை வெட்டி பூ, இயற்கையின் ஒரு குணப்படுத்தும் பரிசாகவும், முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடும் என்பதை அறிந்தது எனக்கு ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. மற்றவர்களைப் போலவே, நானும் என் தலைமுடியைப் பராமரிக்கப் பல வழிகளை முயற்சித்திருக்கிறேன் – ஆனால் இதோ இந்த எளிமையான, உறுதியான தாவரம் எல்லா பதில்களையும் அமைதியாக வைத்திருக்கிறது.

சமீபத்திய ஆய்வுகள் இந்த பாரம்பரிய தாவரத்தின் மருத்துவ பயன்பாடுகளை அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகில் நம்மை சுற்றி நிறைய தேடல்கள் நடைபெறுகின்றன. சிறந்த ஆரோக்கியம், வலுவான முடி, இயற்கையாக  குணமடையும் வழிகள் என இந்த தேடல் நீண்டு கொண்டே செல்லும்.

பல சமயங்களில் அதற்கான  பதில்கள் நாம்  வளர்ந்த இயற்கை சூழலிலேயே இருக்கும். இதை நான் உணர்ந்த பொழுது மிகவும் உற்சாகமானேன்! 

குழந்தை பருவத்தில்  விளையாடிய அந்த எளிய செடி இத்தனை பெரிய நன்மைகள் கொண்டிருக்கிறது என்பதை  அறிந்தவுடன், அந்த  பூவை புதிய மரியாதையுடன் அணுகவேண்டும் என நினைக்க தோன்றியது. 

பாரம்பரிய ஞானத்திற்கு ஒரு குறிப்பு

நமது முன்னோர்கள் அந்த கால கட்டங்களில், ஆராய்ச்சி அறிக்கைகள் எதுவும் இல்லாமல் இயற்கையோடு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கருத்தில் கொண்டு இது போன்ற பாரம்பரிய இயற்கை வைத்ய முறைகளை மேற்கொண்டார்கள். நாம் அதே முறையில் பயன்படுத்தாவிட்டாலும், முன்னோர்களின் இந்த ஞானத்தை மரியாதை செய்யும் போது நம் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை உணர முடியும்.

இது இயக்கையான மூலிகை மருந்துகளை வீட்டிலேயே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது அல்ல.  ஆனால், நம் பாரம்பரியங்களில் மறைந்துள்ள ஞானத்தை மீண்டும் கண்டுபிடிக்க இது ஒரு மெதுவான முயற்சி.

இன்றைய சூழலில் அவற்றை அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், நம் முன்னோர்களின் அறிவை நினைத்து, இயற்கையுடனும் மனிதர்களுடனும் இணைந்து வாழும் அந்த அமைதியான ஞானத்தை மதிப்போம். நமது பழங்கால நினைவுகளை மட்டுமல்லாமல், அதனுடன் இணைந்த அறிவையும் மதிக்கலாம்.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

Call to action banner image
x

Lost Password